ஹொரவ்பொத்தான பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் வலஹவித்தவெவ பகுதியில் மீன்பிடிக்க சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான லத்தீப் ரஹ்மத்துல்லா(26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடிக்குளம் குளத்துக்கு மீன் பிடிக்க சென்ற நான்கு பேரில் ஒருவரே நீரில் மூழ்கியதாகவும், தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.